Sunday, 23 March 2014

பாராளுமன்ற தேர்தலில் பாடம்புகட்டுவார்கள் ;-



 “மீத்தேன்” இன்று டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அசுரன்.

தமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பாக மன்னார்குடியை மையப்படுத்தி 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அரிய வகை நிலக்கரி பூமிக்கு அடியில் இருப்பதை மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது.

அந்த நிலக்கரி படிமத்தின் மேல் மீத்தேன் வாயு படர்ந்துள்ளது. மத்திய அரசு மீத்தேன் வாயுவை வியாபாரரீதியாக எடுக்கும் பொருட்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் மீத்தேன் வாயு திட்டத்தில் 5000 கோடி வரை முதலீடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


உணவளிக்கும் நிலத்தில் செருப்பணிந்து நடப்பதையே பாவமாக கருதும் விவசாயிகள் நிலத்தினுள் குழாய் பதித்து மண்ணின் வளத்தினையே முற்றிலுமாக கெடுக்கும் இந்த மீத்தேன் எடுப்பிற்க்கு எப்படி ஒப்புக்கொள்வார்கள்?


தமிழ் நாட்டின் பெருவாரியாக நெல் உற்பத்தி செய்வது இந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள் தான் இந்த மீத்தேன் எடுப்பு மூலம் இருக்கும் நிலங்களையும் வீணடித்துவிட்டால் தமிழ்நாடு அனைத்திற்க்கும் அண்டை மாநிலத்தினை அண்ட வேண்டியிருக்கும்.


.இந்த மீத்தேனை விவசாய நிலங்களில் எடுப்பதன் மூலம் நிலத்தின் வளம் என்னும் கருப்பையினை சிதைத்து அந்த நிலத்தினை மலடாக்க துடித்துக்கொண்டிருக்கின்றார்கள் மத்திய அரசிடம் கூட்டு சேர்ந்துள்ள தனியார் துறையினர்.


கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் தண்ணீர் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு செல்கிறது. சுமார் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவைகள் அனைத்தும் மீத்தேன் வாயு திட்டத்தால் அழிந்து நாசமாகி விடும்.

விவசாய நிலத்தினுள் அடியில் நிலக்கரி மீது படிந்திருக்கும் பெருவாரியான மீத்தேன் வாயுவினை எடுக்கும்பொழுது 500 முதல் 1,500 அடிமுதல் குழித்தோண்டி நிலத்தடி நீரினை முற்றிலும் வெளியேற்ற வேண்டும் இவ்வாறு செய்வதால் விவசாய நிலத்தினுள் கடல் நீர் உட்புக நேரிடும் அதனால் நிலம் அதன் விளைச்சல் தன்மையை இழந்து காலப்போக்கில் விவசாயமே செய்ய முடியாத அளவிற்க்கு சிதைந்து பாலைவனமாக மாறப்போவதை தடுக்க ஒவ்வொரு விவசாயியும் குடும்பத்தோடு களத்தில் இறங்கிப்போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.


அவர்களோடு விவசாய அமைப்புகளும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் பொதுமக்களும் சில பொதுவுடமை கட்சிகளும்தான் பெருவாரியாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.


ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கினைப்போல விவசாய மக்களின் வாழ்க்கைப்போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கின்றது.
தமிழ் நாட்டினையும் தமிழர்களையும் வஞ்சிப்பதில் அப்படி என்ன சந்தோசமோ தெரியவில்லை மத்திய அரசுக்கு.


சில கட்சிகள் மட்டும் மீத்தேன் எதிர்ப்பு குறித்து களத்தில் இறங்கி போராடாமல் அறிக்கை வெளியிட்டு அதோடு தம் பணி முடிந்ததாக நினைத்து நிறுத்திக்கொண்டன.


 ஆனால் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளும் மிகப்பெரிய இயக்கங்களும் கைகட்டி வேடிக்கைப்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.


ஒட்டுமொத்த விவசாயத்தினையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினையுமே பாதிக்கும் இந்த மீத்தேன் எடுப்பு திட்டத்தினை தடுத்து நிறுத்த தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் கட்சிகள் களத்தில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவாக போராடதது ஏனோ?


ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு பாதிப்பென்றால் மட்டும் தமிழம் முழுவதிலும் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சாலை மறியல்கள் போன்ற பல்வேறு முறைகளில் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து தமிழகத்தினையே கதி கலங்க வைத்துவிடும் கட்சிகள் ஒவ்வொரு கட்சியினையும் வளர்த்துவிட்ட மக்களின் பொதுவான பிரச்சினை என்றால் அரசியல் தந்திரங்களை பயன்படுத்தி இதனை எப்படி தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்று கீழ்த்தரமாக யோசிக்கின்றதே தவிர இந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தினையும், விவசாயம் என்ற பாரம்பரியத்தையும் ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டங்களில் இருந்து துடைத்தெடுக்க துடிக்கும் இந்த மீத்தேன் எடுப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கி போராடவில்லையே?


இந்த கட்சிகள் மத்திய அரசுடனும் தனியார் நிறுவனங்களுடனும் ரகசியமாக கைக்கோர்த்துக்கொண்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து, வருகின்ற தேர்தலுக்காக தனது நிதி நிலமையினை பலப்படுத்திக்கொண்டிருக்கின்றன போலும்.


வழக்கம் போல தேர்தல் சமயத்தில் நோட்டுக்கு ஓட்டு வாங்கிவிடலாம் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கின்றன இந்த கட்சிகள் ஆனால், இந்த முறை மக்கள் நோட்டோ பொத்தானில் தனது ஓட்டினை பதிந்தாலும் பதிவார்களே தவிர நோட்டுக்கு ஓட்டினை நிச்சயம் பதிய மாட்டார்கள் என்பது திண்ணம்.


தமிழர்களையும் தமிழ் நாட்டையும் இம்சித்த காங்கிரஸ் மட்டுமல்ல அதோடு சேர்த்து இன்னும் பல தமிழக கட்சிகள் தமிழகத்தினை விட்டே காணாமல் போகக்கூடிய காலம் வெகுத்தொலைவில் இல்லை.


டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும் விழித்துக்கொண்டார்கள், வாக்கின் மகத்துவத்தினை புரிந்துக்கொண்டார்கள், தங்களை வஞ்சித்த கட்சிகளை அறிந்துக்கொண்டார்கள்.


மக்களின் போராட்டத்தினை மதிக்காத, தங்களின் சுய நலத்திற்க்காக வாக்காளர்களை பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தையும் ஆட்சியையும் அனுபவிக்க நினைக்கும் இந்த கட்சிகளுக்கு நிச்சயம் மக்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாடம்புகட்டுவார்கள்.