Sunday, 23 March 2014

பாராளுமன்ற தேர்தலில் பாடம்புகட்டுவார்கள் ;-



 “மீத்தேன்” இன்று டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அசுரன்.

தமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பாக மன்னார்குடியை மையப்படுத்தி 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அரிய வகை நிலக்கரி பூமிக்கு அடியில் இருப்பதை மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது.

அந்த நிலக்கரி படிமத்தின் மேல் மீத்தேன் வாயு படர்ந்துள்ளது. மத்திய அரசு மீத்தேன் வாயுவை வியாபாரரீதியாக எடுக்கும் பொருட்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் மீத்தேன் வாயு திட்டத்தில் 5000 கோடி வரை முதலீடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


உணவளிக்கும் நிலத்தில் செருப்பணிந்து நடப்பதையே பாவமாக கருதும் விவசாயிகள் நிலத்தினுள் குழாய் பதித்து மண்ணின் வளத்தினையே முற்றிலுமாக கெடுக்கும் இந்த மீத்தேன் எடுப்பிற்க்கு எப்படி ஒப்புக்கொள்வார்கள்?


தமிழ் நாட்டின் பெருவாரியாக நெல் உற்பத்தி செய்வது இந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள் தான் இந்த மீத்தேன் எடுப்பு மூலம் இருக்கும் நிலங்களையும் வீணடித்துவிட்டால் தமிழ்நாடு அனைத்திற்க்கும் அண்டை மாநிலத்தினை அண்ட வேண்டியிருக்கும்.


.இந்த மீத்தேனை விவசாய நிலங்களில் எடுப்பதன் மூலம் நிலத்தின் வளம் என்னும் கருப்பையினை சிதைத்து அந்த நிலத்தினை மலடாக்க துடித்துக்கொண்டிருக்கின்றார்கள் மத்திய அரசிடம் கூட்டு சேர்ந்துள்ள தனியார் துறையினர்.


கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் தண்ணீர் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு செல்கிறது. சுமார் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவைகள் அனைத்தும் மீத்தேன் வாயு திட்டத்தால் அழிந்து நாசமாகி விடும்.

விவசாய நிலத்தினுள் அடியில் நிலக்கரி மீது படிந்திருக்கும் பெருவாரியான மீத்தேன் வாயுவினை எடுக்கும்பொழுது 500 முதல் 1,500 அடிமுதல் குழித்தோண்டி நிலத்தடி நீரினை முற்றிலும் வெளியேற்ற வேண்டும் இவ்வாறு செய்வதால் விவசாய நிலத்தினுள் கடல் நீர் உட்புக நேரிடும் அதனால் நிலம் அதன் விளைச்சல் தன்மையை இழந்து காலப்போக்கில் விவசாயமே செய்ய முடியாத அளவிற்க்கு சிதைந்து பாலைவனமாக மாறப்போவதை தடுக்க ஒவ்வொரு விவசாயியும் குடும்பத்தோடு களத்தில் இறங்கிப்போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.


அவர்களோடு விவசாய அமைப்புகளும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் பொதுமக்களும் சில பொதுவுடமை கட்சிகளும்தான் பெருவாரியாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.


ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கினைப்போல விவசாய மக்களின் வாழ்க்கைப்போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கின்றது.
தமிழ் நாட்டினையும் தமிழர்களையும் வஞ்சிப்பதில் அப்படி என்ன சந்தோசமோ தெரியவில்லை மத்திய அரசுக்கு.


சில கட்சிகள் மட்டும் மீத்தேன் எதிர்ப்பு குறித்து களத்தில் இறங்கி போராடாமல் அறிக்கை வெளியிட்டு அதோடு தம் பணி முடிந்ததாக நினைத்து நிறுத்திக்கொண்டன.


 ஆனால் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளும் மிகப்பெரிய இயக்கங்களும் கைகட்டி வேடிக்கைப்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.


ஒட்டுமொத்த விவசாயத்தினையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினையுமே பாதிக்கும் இந்த மீத்தேன் எடுப்பு திட்டத்தினை தடுத்து நிறுத்த தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் கட்சிகள் களத்தில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவாக போராடதது ஏனோ?


ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு பாதிப்பென்றால் மட்டும் தமிழம் முழுவதிலும் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சாலை மறியல்கள் போன்ற பல்வேறு முறைகளில் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து தமிழகத்தினையே கதி கலங்க வைத்துவிடும் கட்சிகள் ஒவ்வொரு கட்சியினையும் வளர்த்துவிட்ட மக்களின் பொதுவான பிரச்சினை என்றால் அரசியல் தந்திரங்களை பயன்படுத்தி இதனை எப்படி தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்று கீழ்த்தரமாக யோசிக்கின்றதே தவிர இந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தினையும், விவசாயம் என்ற பாரம்பரியத்தையும் ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டங்களில் இருந்து துடைத்தெடுக்க துடிக்கும் இந்த மீத்தேன் எடுப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கி போராடவில்லையே?


இந்த கட்சிகள் மத்திய அரசுடனும் தனியார் நிறுவனங்களுடனும் ரகசியமாக கைக்கோர்த்துக்கொண்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து, வருகின்ற தேர்தலுக்காக தனது நிதி நிலமையினை பலப்படுத்திக்கொண்டிருக்கின்றன போலும்.


வழக்கம் போல தேர்தல் சமயத்தில் நோட்டுக்கு ஓட்டு வாங்கிவிடலாம் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கின்றன இந்த கட்சிகள் ஆனால், இந்த முறை மக்கள் நோட்டோ பொத்தானில் தனது ஓட்டினை பதிந்தாலும் பதிவார்களே தவிர நோட்டுக்கு ஓட்டினை நிச்சயம் பதிய மாட்டார்கள் என்பது திண்ணம்.


தமிழர்களையும் தமிழ் நாட்டையும் இம்சித்த காங்கிரஸ் மட்டுமல்ல அதோடு சேர்த்து இன்னும் பல தமிழக கட்சிகள் தமிழகத்தினை விட்டே காணாமல் போகக்கூடிய காலம் வெகுத்தொலைவில் இல்லை.


டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும் விழித்துக்கொண்டார்கள், வாக்கின் மகத்துவத்தினை புரிந்துக்கொண்டார்கள், தங்களை வஞ்சித்த கட்சிகளை அறிந்துக்கொண்டார்கள்.


மக்களின் போராட்டத்தினை மதிக்காத, தங்களின் சுய நலத்திற்க்காக வாக்காளர்களை பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தையும் ஆட்சியையும் அனுபவிக்க நினைக்கும் இந்த கட்சிகளுக்கு நிச்சயம் மக்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாடம்புகட்டுவார்கள்.

Saturday, 1 February 2014

நம் தலைமுறைக்கு கிராமம்



நம் தலைமுறைக்கு கிராமம்

கிராமம்…….. இனி வரப்போகும் நமது தலைமுறக்கு இப்படி ஒன்று இருந்ததே புத்தகத்தில் படித்து தான் தெரிந்துகொள்ள வேண்டும்போலிருக்கின்றது இன்று கிராமங்கள் செல்லும் நிலையை பார்த்தால்
பச்சைபசேல் என்ற வயல்வெளிகளும், சுத்தமான காற்றும், சுவையான நிலத்தடி நீரும் ஆறுகளும் குளங்களும் ஏரிகளும் கால்நடை செல்வங்களும் இன்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மறைந்துகொண்டுபோய் இருப்பது தெரியவில்லையா !
வெளிநாட்டு கழிவுகளை உரங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்களில் கொட்டி அதன் வளத்தினை கெடுத்துவிட்டோம்,
நம் தேவைக்கேற்ப விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிவிட்டோம் இதனால் மேய்ச்சலுக்கும் வைக்கோலுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் காலநடைகளை விற்றுவிட்டோம். இது போதாது என்று மத்திய அரசு வேறு மீத்தேன் எடுப்பு என்ற பெயரில் இருக்கும் விளை நிலங்களில் துளையிட்டு குழாய் பதித்து விளைச்சல் தன்மையை வீணடித்துக்கொண்டிருக்கின்றது.
 குளம், ஏரி இவற்றில் உள்ள மண் முதல் ஆறுகளின் கரைகளை பலப்படுத்துவதற்க்காக இருந்த பெருங்கற்கள் முதல் சுரண்டி எடுத்து செலவில்லாமல் நம் வீடுகள் கட்டுவதற்க்கு பயன்படுத்தி விட்டோம்.
இருக்கும் மரங்களை வெட்டி விறகுக்காகவும் வீட்டின் தேவைக்காகவும் பணத்திற்க்காகவும் விற்று விட்டோம்.
திறந்த வெளிகளில் மலம் கழித்து சுற்று சூழலை மாசுபடுத்தி தொற்று நோய்களை பெருக்கிவிட்டோம்.
கிராமபுறங்களில் இருந்த கூட்டு குடும்ப முறையினை சிதைத்து இன்று குட்டி குடுமபமாக ஆக்கிவிட்டோம்.
நகரவாழ்க்கையை போல நமது தேவைக்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியில் வர கற்றுகொண்டு கிராம வாழ்க்கை முறையை சிதைத்து விட்டோம்
இதனால் நிகழப்போவது என்ன உணவு பஞ்சம் உறவு பஞ்சம். ஏன் காற்றுக்காகவே கூட இனி நாம் பந்தாடப்படபோகின்றோம் என்பது உங்களுக்கெல்லாம் விளங்கவில்லையா? விரைவிலேயே நாம் வீதிகளில் சோற்றுக்காகவும் காற்றுக்காகவும் சண்டையிடபோகின்றோம்.
இவற்றையெல்லாம் தடுத்து நமது இளைய தலைமுறைக்கு வரமாக இந்த அழகான கிராமப்புற வாழ்க்கையை மீட்டு விட்டு செல்ல வேண்டும் அவர்களும் இயற்க்கையோடு இயைந்த வாழ்வினை பெற்று நல்வாழ்வு வாழ்வேண்டுமல்லவா அதற்க்கு  நாம் நம்மால் முடிந்த அளவு என்ன செய்யலாம்
கூட்டு குடும்ப முறையினை ஊக்குவிப்பதன் மூலம் வருங்கால நமது சந்ததியருக்கு அன்பு, பாசம், அரவணைப்பு, தட்டிக்கொடுத்தல், விட்டுகொடுத்தல் போன்ற நல்ல பண்புகளையும் அன்புகளையும் ஏற்படசெய்யலாம்.
செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் வயல்களில் இடுவதை அரவே தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நம் பாரம்பரிய இயற்கை விவசாயத்திற்க்கு மாற முயற்ச்சிக்க வேண்டும்.
விளைநிலங்கள் விலை நிலங்கள் ஆவதை தடுத்து நிறுத்தியாகவேண்டும் இல்லையென்றால் விவசாயம் விரைவில் நம் வீட்டு மொட்டைமாடியில் தான் செய்யவேண்டி வரும்.
கால்நடைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் பருவ மாற்றங்கள் ஏற்படும்போது தான் தொற்று நோய்கள் பரவி அவை இறப்புக்கு உள்ளாகின்றன எனவே கால்நடை துறை விழிப்புணர்வு பிரச்சாரங்களை புறம்தள்ளாமல் சரியான சிகிச்சைமுறைகளை கால் நடைகளுக்கு அளித்து பாதுகாக்க வேண்டும்.
தூர்வாரப்படாத கிராமப்புறங்களில் உள்ள குளம் வாய்க்கால், ஏரி, போன்றவைகளை கிராம மக்கள் ஒன்றிணைந்து தூர்வாரலாம் இதனால் காலப்போக்கில் இவை அழித்து போவதை தடுக்கலாம்.
ஒரு மரத்தினை வெட்டும்போது நிச்சயம் பத்து மரக்கன்றுகளை நட்டு அவற்றினை பராமரிக்கவேண்டும் என்ற உறுதிமொழியினை கிராம மக்கள் ஏற்க்கவேண்டும்.
திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை நிறுத்தி அரசு தரும் கழிவறை கட்டுவதற்க்கான மானியங்களை பெற்று வீட்டில் கழிவறைகளை கட்டி சுகாதாரமாக பயன்படுத்தலாம்.
நீங்கள் கிராமத்தினை பாதுகாக்க உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பை தாருங்கள்.... கிராம வாழ்வு என்ற இயற்கை கொடுத்த வரத்தை தவறவிட்டுவிடாதீர்கள்.


இவற்றிணை கிராம மக்கள் அரசுடன் இனைந்து செய்தால் இன்னும் சில தலைமுறைகளுக்கு நம் கிராமம் வசப்பட்டு இருக்கும் இல்லையெனில் அவர்கள் கிராமங்களை வருங்காலத்தில் இதுப்போன்ற ஏடுகளில் தான் படிக்கவேண்டி இருக்கும்.

Monday, 6 January 2014

S.T.Somasundaram Ex. MP எஸ்.டி.சோமசுந்தரம்

எஸ்.டி.சோமசுந்தரம்.  1923 - 2001

Picture
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செண்டாங்க்காடு என்ற கிராமத்தில் பிறந்து, பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பைத் தொடர்ந்தார். இவர் படித்த இந்த பள்ளியில் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன் ஆகியோரும், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமனும் படித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவராக இருக்கும்போதே அரசியளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.  பள்ளி படிப்பை முடித்த திரு எஸ்.டி.எஸ் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ  பொறியியல் பட்ட படிப்புக்காக சேர்ந்தார்.  தடகள விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். பள்ளியிலும், அண்ணாமலை பல்கலைகழகத்திலும் ஓட்டபந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தை பெற்றுவந்தார்.

1951-ல் அரசு அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வகுப்புவாரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மாணவப் பருவத்திலேயே போராட்டத்தில் கலந்து கொண்டவர்.1955-ல் தமிழர்கள் வாழும் பகுதியான தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியவை கேரளாவுடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். அப்போது இவர் திராவிட மாணவர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக இருந்தார்.

1957-1967 மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல மாநாடுகளை நடத்தி மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வுகளை ஏற்படுத்தியவர். மாணவர் பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களின் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவர். 1965-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகததில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்று  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார்.

1967-1978 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். மூன்று முறை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முறையே முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன், மதுக்கூர் ஜமீன்தார் கிருஷ்ணசாமி கோபாலர், திரு. எல்.கணேசன் ஆகியோரை தோற்க்கடித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலாவதாக தேர்ந்த்தேடுக்கப்பட்ட எம்.பியும் இவரேயாவார். 1980 சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு ஏ.ஆர். மாரிமுத்து அவர்களை தோற்க்கடித்தார்.

1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க ஆரம்பித்தபோது, அவருடன் தோளோடு தோள் நின்று அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை வழங்கினார். அவரால் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர். எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கும் போது அவருக்கு துணை நின்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்  எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.கிருஷ்ணசாமி, முனுஆதி, குழ.செல்லையா, எஸ்.ஆர்.இராதா, கே.சௌந்தரராசன், இரா.மோகனரங்கம்,  என்.எஸ்.இளங்கோ, முசிறிப்புத்தன் ஆகியோர்கள். மற்ற தலைவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை கண்டு பின்பு தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு எஸ்.டி.எஸ் அவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள், புதுவை மாநில பொதுத் தேர்தல்கள் ஆகியவற்றில் தேர்தல் பணிக்குழு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றி வெற்றிக்காக பாடுபட்டவர். அப்போதைய ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஏற்படுத்தப்பட்ட போராட்ட நடவடிக்கை குழுவுக்கு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.

1973 ஆம் ஆண்டு அக்டோபரில், மாஸ்கோவில் உலக சமாதானக் கழக மாநாடு நிகழவிருந்தது. அதில் கலந்து கொள்ளும்படியும் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் அந்த மாநாட்டுக்குத் தம் பிரதிநிதிகளக எஸ்.டி.சோமசுந்தரம் ,கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோரை அனுப்பி வைத்தார். அ.தி.மு.கவின் பிரச்சார செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார். தந்தை பெரியார் சிலை அமைப்பு குழுவின் தலைவராகவும், பெரியார் சிலை திறப்பு வரவேற்புகுழு தலைவராகவும் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.

1978-1984 வருவாய்த்துறை அமைச்சர்
வருவாய்த்துறை அமைச்சருக்கு என்னை போன்றவர்களின் பாராட்டு மட்டுமே வருவாய் என்று எம்.ஜி.ஆரால் புகழாரம் சூட்டப்பட்டவர்.எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் கிராமங்களில் இருந்த மணியகாரர் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்து, கிராம முறையை மாற்றி அமைத்து செம்மையாக்கினார். இந்தியாவின் மற்ற மாநில முதல்வர்களின் பாராட்டையும் பெற்றார்.

இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டிருந்தார். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு ஏற்ப்பட வேண்டும் என்று விரும்பியவர். அப்பிரச்சனையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிறந்த ஆலோசகராக திகழ்ந்தார். இலங்கையில் 1983 இனப்படுகொலை நடந்தபோது மனம் கொதித்து தனது எதிர்ப்பை கருப்பு சட்டை போராட்டங்கள் மூலம் தெரிவித்தவர். 1985-ல் இலங்கைத் தமிழருக்காக மதுரையில் மிகப்பெரிய எழுச்சி பேரணியை நடத்தி இரயில் மறியல் போராட்டத்தின் மூலம் சிறை சென்றவர்.

1983-ல் பட்டுக்கோட்டை பகுதியில் தொழில் நுட்ப கல்லூரியை நிறுவி ஏழைகள் தொழில் கல்வி படிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.1995-ல் எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் நடத்திக்காட்டி அனைவரின் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவரானார்.சுற்றுச்சாலை, இரயிவே மேம்பாலம், புதிய பேருந்து நிலையம் போன்றவற்றை தஞ்சாவூருக்கு ஏற்ப்படுத்தி கொடுத்தார்.

ரஷ்யா,ஜப்பான்,ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணித்துள்ளார்.

எஸ்.டி.எஸ் நூல்கள் 
தமிழின படுகொலை,
காவேரித் தாய்க்கு கருணாநிதி செய்த கேடுகள்,
இலங்கை இனப்படுகொலை பற்றி இந்திய பிரதமருக்கு எஸ்.டி.எஸ்ஸின் பத்து கோரிக்கைகள்,
மதுவிலக்கு கொள்கையில் தமிழக முதல்வர்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். .
"போர்வாள்" என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.

1984-ல் திருச்சியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்திற்கிடையே நமது கழகம் என்ற கட்சியை தொடக்கி பிரகடனப்படுத்தினார்.

1987-ல் எம்.ஜி.ஆர் அவர்களின் அழைப்பை ஏற்று அ.இ.அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
1987-ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் பணியாற்றினார்.

1991 சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தி.மு.கவைச் சேர்ந்த அப்போதைய அமைச்சர் திரு எஸ்.என்.எம்.உபயத்துல்லா அவர்களை தோற்க்கடித்தார்.

1991-1996 சட்டப்பேரவை உறுப்பினர், வருவாய்த்துறை அமைச்சர்.

ஆயிரக்கணக்கான சுயமரியாதை தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்து சுயமரியாதை சுடராக விளங்கியவர். மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லாதபோது சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.

பொதுமக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் அனைவராலும்"பாசமிகு எஸ்.டி.எஸ்" என்று அழைக்கப்பட்டவர்.அரசியலில் சுடர் விட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.டி.சோமசுந்தரம். ஏனோ அவரது மறைவு (06.12.2001) யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் இறந்ததாலோ என்னவோ?

கோபாலசாமி இரகுநாதஇராசாளியார்.

Picture தொல்காப்பியருக்குச் சிலை நிருவி தமிழ் வளர்த்த பண்டிதர் இராசளியார்.

அரித்துவாரமங்களம், இவ்வூரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் பத்தொன்பதாம்நூற்றாண்டின் பிற்பகுதியில்(1870) பிறந்து இருபதாம் நூற்றாண்டின்முற்பகுதியில்(1920) இயற்கையெய்திய கோபாலசாமி இரகுநாதஇராசாளியார். 

இராசாளியார்.அவர்களின் வாழ்க்கை இற்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடமாகவும்வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் அமைந்துள்ளது. தன் மாமன் வேலுவாண்டையாரின் திருமகள் பெரியநாயகியம்மையைவாழ்க்கைத் துணையாக ஏற்று வையகம் போற்ற வாழ்ந்தார். இளம் வயதில் தந்தையைஇழந்த நிலையில் கல்லூரி படிப்பை முடிக்க இயலாமல் குடும்ப சுமையைஏற்றுக்கொண்டார். தமிழ் மொழியின்பாலும் இலக்கியங்களின்பாலும் மிகவும்ஈடுபாடு கொண்ட இராசாளியார் பண்டைய இலக்கியநூல்கள் பலவற்றை தேடிப்பெற்றுதம் ஊரிலேயே ஒரு நூலகம் அமைத்தார்.

தமிழார்வம் காரணமாக தன்செல்வச்செழுமையை பயன்படுத்தி கிடைப்பதற்கரிய பல சுவடிகளைப் பெற்று தம்நூலகத்தை மிகச் சிறந்த நூலகமாக அமைத்தார்.இங்கு வருகை தந்த திருவாடுதுறை ஆதினகர்தர் நூலகத்திலுள்ள அரிய நூல்களையும்சுவடிகளையும் பார்த்து இந் நூலகத்திற்கு சரஸ்வதி மகால் எனவும் பெயர்இட்டார். தமிழ்த் தாத்தா என்று அழைக்கபடும் உ.வே.சாமிநாத ஐயர் புறநானூறுஒலைச்சுவடிகளை இராசாளியார் அவர்களிடம் தான் பெற்று அச்சிட்டார் என்பதுவரலாறு.

இராசளியார் அவர்களின் தமிழார்வமும் மொழிப்பற்றும், றிவுப்பசியும் அதைத் தீர்துக்கொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் எங்கு கூட்டங்கள்நடந்தாலும் சென்று பங்கேற்கும் பாங்கும் தனிச்சிறப்பாகும். நான்காம் தமிழ்சங்கம் எனப்போற்றப்படும் இன்றைய மதுரைத் தமிழ்ச் சங்கத்தைபாண்டித்துரை தேவருடன் இனைந்து உருவாக்கியதில் இராசளியார் பங்கும் ஒரு வரலாறு. 

இராசளியார் தஞ்சையில் இருந்த போது தஞ்சைத்தமிழ் சங்கம் செயல்பாடற்று போனது குறித்து கவலையுற்ற புலவர் பலர் இராசளியார் அவர்களிடம் தூண்டியதன் விளைவாக கரந்தையில் புதியதமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதும் வரலாறு.கரந்தை தமிழ்ச்சங்க நூலகத்திற்க்குத் தம் நூலகத்தில் இருந்துநூற்றுக்கணக்கான நூல்களையும் வழங்கி, குன்னூரில் ஒரு நூலகத்தையும் அமைத்துஅங்கு தொல்காப்பியருக்குச் சிலையும் நிருவி தமிழ் வளர்த்தார் பண்டிதர்இராசளியார். 

இவ்வாறு இலக்கியம், சமயம், அரசியல், ஆகிய துறைகளில் ஈடுபட்டுபுகழ் பெற்ற இராசளியார் குற்றபரம்பரை சட்டத்திற்கு எதிராகக் குரல்கொடுத்துத் தம் சமூக மக்களின் மேன்மைக்கு வழி செய்தார். செல்வத்துப் பயனேஈதல் என்பதற்கிணங்க வள்ளமை மிக்க நள்நிதிச் செல்வராகத் திகழ்ந்தார். இவர்வாழ்வு போற்றுவதற்க்கும், பின்பற்றுவதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.